நீட் ரத்து கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம்; 50-க்கும் மேற்பட்டோர் கைது
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை டெல்லி காவல் துறையினர் தாக்கியதைக் கண்டித்தும் நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தியர் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 100 பேர் திடீரென அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜேந்திரன் சிலை முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் ராஜேந்திரன் சிலை முன்பு பல்கலைக் கழகத்திற்கு செல்லும் நுழைவு வாயிலை அடைத்தபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர் அமைப்பினரை கைது செய்தனர். அப்போது மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் போலீசார் போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.


