அண்ணாமலை நடத்தும் மாநாடு குறித்து அமைச்சர் விக்னேஷ் கருத்து
கோவையில் அண்ணாமலை நடத்தும் மாநாட்டை ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்ப்பதாக அமைச்சர் விக்னேஷ் கருத்து.
தமிழக அரசியலில் தீய சக்தியைத் (திமுக) தவிர வேறு யாரையும் எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை
கோயில் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் மீட்கப்படும் – அமைச்சர் விக்னேஷ்*
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோவையில் நடைபெறும் அண்ணாமலையின் மாநாடு, வியட்நாமில் உயிரிழந்த பழனி இளைஞரின் உடலைக் கொண்டு வருதல், பழனி கோயில் நில மோசடி மற்றும் டாஸ்மாக் கடைகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்துப் பேசினார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், கோவையில் அண்ணாமலை நடத்தும் ‘வீ த லீடர்ஸ்’ மாநாட்டிற்கு இளைஞர்கள் திரண்டு செல்வது குறித்த கேள்விக்கு, “இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் வரலாம். கரூர் நில விவகாரத்தில் அவரே கூட எங்களைப் பாராட்டியுள்ளார். இந்த ஆரோக்கியமான விவாதங்களை மாநாடாக மட்டுமே பார்க்கிறேன். தமிழக அரசியலில் தீய சக்தியைத் (திமுக) தவிர வேறு யாரையும் எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை” என்றார்.

வியட்நாம் விபத்தில் பலியான பழனியைச் சேர்ந்த முருகபிரபுவின் உடலைக் கொண்டு வருவது குறித்துப் பேசுகையில், “தகவல் அறிந்த உடனே அயலக வாழ்வு நலன் துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டேன். அவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும், உடலை மீட்க முழு வீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் உரிய பதில் தெரியவரும்” எனக் குறிப்பிட்டார்.
பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடிப் புகார் குறித்துப் பேசுகையில், “திண்டுக்கல் மாரியம்மன் கோயில் பகுதிக்குச் சென்றபோதுதான் இத்தகவல் தெரிந்தது. உடனடியாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷைத் தொடர்பு கொண்டு பேசினேன். தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, முறேகடாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் உடனடியாக மீட்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும்” என்றார்.
மேலும், திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி மற்றும் சண்முக நதி தூர் வாருதல் குறித்துப் பேசிய அவர், பழனி பெரியார் சிலை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்தான கேள்விக்கு, “முதற்கட்டமாக 717 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. நிதிச் சுமைகள் தற்பொழுது சீராகி வருவதால், அடுத்தகட்டமாகப் பொதுமக்கள் கோரும் முக்கியப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இறுதியாகத் தனது தந்தைக்குப் பிடித்த கோரிக்கடவு பகுதியின் அடிப்படைத் தேவைகளான பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் பட்டா விவகாரங்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதே தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்


