குப்பை போல் கிடக்கும் தார்பாய்கள் – விவசாயிகள் அதிர்ச்சி
கும்பகோணம் அருகே எம்.ஆர்.எம் மில்லில் பல கோடி மதிப்புள்ள தார்பாய்கள் குப்பை போல் கிடப்பு – விவசாயிகள் அதிர்ச்சி
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எம்.ஆர்.எம் (MRM) நவீன அரிசி ஆலை வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தார்பாய்கள் குப்பை போல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல் கொள்முதல் மற்றும் மழை காலங்களில் நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க பயன்படுத்தப்படும் இந்த தார்பாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சேதமடைந்து வருகின்றன.
ஏற்கனவே ஆலையின் குடோனில் 4200 டன் நெல் மூட்டைகள் அடுக்க வேண்டிய இடத்தில் 18 லட்சம் பழைய சாக்குகள் வீணாக கிடப்பதாகவும், அதனை கண்டிக்க விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அரசு பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் இவ்வாறு வீணடிக்கப்படுவதை கண்டித்த விவசாயிகள், உடனடியாக தார்பாய்களை முறையாக சேமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ஆலை அதிகாரிகளிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.


