தொண்டி: வலைக்குள் சிக்கிய 30 கிலோ நட்சத்திர ஆமை: பத்திரமாக மீட்ட தொண்டி மீனவருக்குப் பாராட்டு!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி புதுக்குடி ‘5 வீடு’ பகுதியைச் சேர்ந்தவர் சித்து மகன் சோனைமுத்து மீனவரான இவர், இன்று காலை தனது நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவர் விரித்திருந்த வலையை மீட்டபோது, அதற்குள் ஏதோ கனமான பொருள் இருப்பது தெரியவந்தது. வலையை இழுத்துப் பார்த்தபோது, அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாகச் செயல்பட்ட சோனைமுத்து, ஆமைக்கு எந்தவித காயமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்கேற்ப, தனது மீன்பிடி வலையைத் துணிச்சலுடன் அறுத்து, அந்த அரிய வகை நட்சத்திர ஆமையை எவ்வித பாதிப்புமின்றி உயிருடன் மீண்டும் கடலுக்குள்ளேயே பத்திரமாக விடுவித்தார்.

“வலை சேதமடைந்தாலும் பரவாயில்லை, ஒரு அரிய உயிர் பிழைக்க வேண்டும்” என்ற நோக்கில் மீனவர் செயல்பட்ட விதம் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த நெகிழ்ச்சியான காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி (Viral) வரும் நிலையில், கடலுயிரைக் காத்த மீனவர் சோனி முத்துவுக்குப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சக மீனவர்கள் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவித்து வருகின்றன.


