திருவாடானை அருகே வயல்வெளியில் 500 யூனிட் மணல் குவிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, மாவூர், மற்றும் மாவூரிலிருந்து பாண்டுக்குடி செல்லும் சாலையில் உள்ள வயல்வெளிகளில், மணல் பாங்கான இடங்களைத் தேர்வு செய்து சுமார் 500 யூனிட்டிற்கும் அதிகமான மணல் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு செய்திகள் வெளியானபோதிலும், மாவட்ட நிர்வாகமோ, கனிமவளத்துறை மற்றும் புவியியல் துறை அதிகாரிகளோ இதுவரை எவ்வித ஆய்வோ அல்லது நடவடிக்கையோ எடுக்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மணலைச் சுத்திகரித்து, ஆற்று மணலாக மாற்றி சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் மணல் மாஃபியாக்கள் மீது காவல்துறையினரும், கனிமவளத்துறையினரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது மணல் கொள்ளையர்கள் அதை அள்ளிச் செல்ல வழிவகை செய்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


