திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றியவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தாமரைபுலம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் (27). திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய காசிநாதன், அவரை வேளாங்கண்ணிக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து காசிநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

