திருக்குளம்பியத்தில் புனித தேத்தரவு அன்னை ஆலய ஆண்டு தேர்பவனி
விடிய விடிய நடைபெற்ற தேர்பவனி; சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் திருக்குளம்பியம் கிராமத்தில் அமைந்துள்ள புனித தேத்தரவு அன்னை ஆலயத்தின் ஆண்டு தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான ஆண்டு தேர்பவனி இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பேண்ட் வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் நடைபெற்ற தேர்பவனிக்காக மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேரில் புனித தேத்தரவு மாதா, புனித அந்தோணியார், புனித சவேரியார், ஆரோக்கியநாதர், சம்மனசு ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது இறைமக்கள் தங்களது வீடுகளின் முன்பு சாம்பிராணி தூபம் ஏற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி, மாலை அணிவித்து புனிதர்களை வழிபட்டனர்.
இரவு தொடங்கிய தேர்பவனி விடிய விடிய நடைபெற்ற நிலையில், கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து மாந்தை பங்குத்தந்தை ஜான் ஜோசப் சுந்தரம் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து கொடி இறக்கப்பட்டு, புனித தேத்தரவு அன்னை ஆலயத்தின் ஆண்டு தேர்பவனி திருவிழா நிறைவு பெற்றது.
திருவிழாவில் திருக்குளம்பியம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று இறை ஆசிபெற்றனர்.


