படுகாயமடைந்த மீனவர்… தாயகம் அழைக்க உறவினர்கள் ஆட்சியரிடம் மனு
ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை, தாயகம் கொண்டுவர, உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு, தலைவிரி கோலமாக தரையில் புரண்டு அழுத காட்சி பார்ப்பவர்களை கண்கலச் செய்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சார்ந்த மீனவர்கள் மூன்று பேர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஆகிய நான்கு பேர், ஈரான் நாட்டில் தங்கி கடலில் மேம்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவர்கள் மீது ஈரானிய கடற்கொள்ளையர்கள், ஈரான் கடற்பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் கீழ்மூவர் கரை கிராமத்தைச் சார்ந்த சங்கர் என்ற மீனவர் படுகாயம் அடைந்து ஈரான் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவருக்கு போதிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சங்கரின் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது துக்கம் தாங்காமல், சங்கரின் மனைவி அமுதா மற்றும் உறவினர்கள் தலைவிரி கோலமாக, தலையில் அடித்துக் கொண்டு கீழே விழுந்து அழுது புலம்பினர்.
இந்தக் காட்சி காண்பவர் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்தது. உடனடியாக சங்கரை தாயகம் அழைத்து வர வேண்டும் என்றும், உயிரிழந்த மாவீரன் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


