செஞ்சியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, வல்லரசு இந்தியா இயக்கம் சார்பில் செஞ்சியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் அகாடமியின் நிறுவனர் கண்ணன் தலைமை வகித்தார் அவர், அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் ஆற்றுப்படுத்துநர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அப்பம்பட்டு சையத் உஸ்மான் முன்னிலை வகித்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த மைய மருத்துவர் விஜயா தலைமையிலான மருத்துவக் குழுவினரும், செஞ்சி அரசு மருத்துவமனை மருத்துவப் பணியாளர்களும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி வர்த்தகர் சங்க வட்டத் தலைவர் செல்வராஜ், நர்சிங் கல்லூரி மாணவிகள், பயிற்றுநர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 20-க்கும் மேற்பட்ட ரத்தக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்து, சமூக நலப் பணியில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.


