ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கருப்புக்கொடிகளுடன் புறப்படும் கருஞ்சட்டைப்படை: வைகோ அறிவிப்பு
திருவள்ளுவர் சிலைக்குக் காவித் துண்டு அணிவித்த ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக போராட்டம்
திருவள்ளுவர் சிலைக்குக் காவித் துண்டு அணிவித்த ஆளுநரின் செயலைக் கண்டித்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் தனது புகைப்படக் கலைஞர் ராஜாவின் மகள் சினேகா மற்றும் மணமகன் அபிஷேக் திருமணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, திருவள்ளுவரை ஒரு சனாதனி என்று கூறிய ஆளுநரைக் கண்டித்து, இன்று மாலை 4 மணி அளவில் பனகல் மாளிகைக்கு எதிரே தாங்கள் திரள உள்ளதாகக் கூறினார்.
அங்கிருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காகக் கருப்புக்கொடிகளுடன் தங்களது கருஞ்சட்டைப்படை புறப்பட்டுச் செல்லும் என்றும், இந்த ஜனநாயகக் கடமையை எந்தவொரு அமளிக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான வழியில் ஆற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு ரொம்ப காலமாகவே சீர்கெட்டுப் போய்விட்டது என்று விமர்சித்த அவர், விலகிச் சென்றவர்களின் உளறல்களுக்கெல்லாம் வைகோ பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்குக் காரசாரமாகப் பதிலளித்தார்.


