:புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்!
புதுச்சேரி: சட்டப்பேரவை என்பது மக்களின் பிரச்சினைகள், அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படும் முக்கியமான ஜனநாயக அமைப்பு என்பதால், அதன் நடவடிக்கைகளை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களை சென்றடைய வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் பிரச்சினைகள், அரசின் பதில்கள் மற்றும் முக்கிய விவாதங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள நேரலை ஒளிபரப்பு உதவும் என்றார்.
மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பல்வேறு தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “பிக்பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிகமானோர் பார்க்கின்றனர்” எனக் குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவை நேரலை என்பது மக்களுக்கும் ஆட்சிக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய ஜோஸ் சார்லஸ் மார்டின், அதேபோன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளையும் பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பான கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

