நெல்லை தாமிரபரணி ஆற்றில் புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு
ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.
ஆடிப் பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும் தமிழகத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் பாரம்பரிய விழாவாகும்.
இத்தினத்தில் காவிரி உள்ளிட்ட நதிக்கரைகளில் மக்கள் கூடி நீராடி, இயற்கைக்கு நன்றி செலுத்தி, புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வது வழக்கம். அதன்படி நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தாமிரபரணி படித்துறையிலும் 18ம் பெருக்கையொட்டி பெண்கள் திரளானார் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தாமிரபரணி நதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்ததோடு கலசங்களுக்கு மஞ்சள் மஞ்சள் கயிறு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு பல்வேறு வகையான சாதங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து புதுமண தம்பதிகள் தங்களது திருமாங்கல்ய மஞ்சள் கயிறு மாற்றியும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு புதிய வஸ்திரங்கள் வளையல் குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட சுப மங்கள பொருட்களோடு அகல் விளக்கு ஏற்றி தாமிரபரணி நதியின் சமர்ப்பித்தும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

