ஏனாம் கோதாவரி ஆற்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் – தவறி விழுந்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலி
நண்பர்களுடன் படகில் சென்று பிறந்தநாள் கொண்டாடியபோது விபரீதம்; நீண்ட தேடுதலுக்குப் பிறகு உடல் மீட்பு
புதுச்சேரி – ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில், நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட கோதாவரி ஆற்றில் நாட்டுப் படகில் சென்ற 23 வயது கூலித் தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனாம் தரியாலதிப்பா கிராமம், பாலயோகி காலனியைச் சேர்ந்தவர் கர்னீடி சேகர் (23). தினக்கூலித் தொழிலாளியான இவர், தல்லரேவு கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர ராவ் என்பவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தனது ஆறு நண்பர்களுடன் நாட்டுப் படகில் சென்றதாக கூறப்படுகிறது.
நண்பர்கள் அனைவரும் ஜி.எம்.சி. பாலயோகி பாலத்தின் 8-வது தூண் அருகே ஆற்றுப் பகுதிக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றின் நடுவே மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு மேல் படகில் திரும்பிக் கொண்டிருந்தபோது, சேகர் எதிர்பாராதவிதமாக கோதாவரி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். நண்பர்கள் அவரை மீட்க முயன்ற நிலையில், அவர் நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல் ஆய்வாளர் குமார் மேற்பார்வையில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. நள்ளிரவில் ‘சீகல்’ (Seagull) படகு உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற தேடுதலுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் சேகரின் உடல் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த சேகர், சிரிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், தம்பதிக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் உயிரிழப்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


