in

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை


Watch – YouTube Click

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான அணி, அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணி, பா.ஜ.க. தலைமையிலான அணி, நாம் தமிழர் என 4 முனைப் போட்டியாகத்தான் தற்போதைக்குத் தென்படுகிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். மற்ற கட்சிகளுடன் பேச்சு மறைமுகமாக நடைபெறுகிறது. ஆனால், இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கலாம். கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக-வுடனும் பேசி வருகின்றனர். ஆனால், மறைந்த கேப்டனின் கட்சியின் ஆசையோ, பாஜக-வுடன் கூட்டணி சேர்வதில்தான் இருக்கிறது என்பதை அக்கட்சியின் தலைமையக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், வரும் 7-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதியான முடிவை எடுக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத சில தலைவர்கள் நமக்களித்த தகவலின்படி, 5 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் ஆகியவற்றை தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். ஏனெனில், கேப்டனின் அனுதாப அலை, கூட்டணிக்குப் பெரும்பலமாக இருக்கும் என நம்புகிறாராம். ஆனால், 5+1 பார்முலா-விற்கு, கூட்டணி தலைமை அதிக அழுத்தம் கொடுத்தால், 4+1 என்ற உடன்பாட்டிற்கு இறங்கிவரலாம். ஆனால், 5+1 என்பதில்தான் உறுதியாக இருக்கிறதாம் தேமுதிக-வின் தலைமை.

இதற்கிடையே, அக் கட்சியின் வேட்பாளராக, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை இறக்கலாம் என்ற தகவல்கள் கசிந்தாலும், தற்போது வேண்டாம், சட்டப்பேரவை தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம் என பிரேமலதா கூறிவிட்டாராம். தற்போதைய நிலையின்படி, சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகிய மூவரும் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் அதில், கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிட ஒப்புக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதிலும் தெளிவாக இருக்கிறதாம் தேமுதிக.

அதேபோல், மாநிலங்களவை இடத்தைப் பொறுத்தமட்டில், அந்த இடத்தில் பிரேமலதாவுக்கு கொடுத்து, அவரை எம்-பி-யாக்க வேண்டும் என அக் கட்சியின் பெரும்பாலோர் விரும்புவதாகவும் அக் கட்சியின் தலைமையகத்தில் பேச்சு அடிபடுகிறது. எனவேதான், 5+1 என்ற ஃபார்முலாவில் உறுதியாக இருக்கிறார்களாம். கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சி, அதிக அழுத்தம் கொடுத்தால், ஒரு லோக்சபா தொகுதியைக் குறைத்துக் கொண்டு, 4+1 ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொள்வார்கள் என விடயம் அறிந்த தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.

பாஜக-வை பொறுத்தமட்டில், தேமுதிக-வை இழுப்பதிலும், அதுவும் மறைந்த கேப்டனின் ரசிகர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், கூட்டணி கிட்டத்தட்ட உறுதிதான். 5 அல்லது 4 மக்களவை தொகுதிகள் கொடுப்பதில் பெரிய சிக்கல், பாஜக-வுக்கு இருக்காது. ஆனால், அந்த 1 மாநிலங்களவை இடம்தான் இழுபறியாக இருக்கலாம். ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி, 1 ராஜ்யசபா இடத்தில் தேமுதிக-சமரசம் செய்துக்கொள்ளாது என தெரிகிறது.

தற்போதைக்கு மறைமுகமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகள், இன்னும் ஒரு சிலதினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.


Watch – YouTube Click

What do you think?

சிறையில் தீயாக பரவும் எய்ட்ஸ்

லிவ் – இன் உறவை பதிவு செய்ய உத்தரவு