குப்பையில்லா கடற்கரை! நாகையில் சிறுவர்களின் அசத்தல் முயற்சி
நாகை பழைய கடற்கரையை மீட்டெடுத்த சிறுவர்கள்: 1 டன் கழிவுகளை அகற்றி நகராட்சியிடம் ஒப்படைத்த ‘வீ தி லீடர்ஸ்’
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நாகப்பட்டினம் பழைய கடற்கரை பகுதியில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மாபெரும் தூய்மைப் பணி நடைபெற்றது.
அமைப்பின் நிர்வாகி ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து கடற்கரையில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சுமார் 1 டன் அளவிலான குப்பைகளை அமைப்பினர் தீவிரமாகச் சேகரித்து, நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் R. ஆறுமுகம், மாரீஸ்வரன், சக்தி ராஜ், வீரமணி, திருமதி பாரதி, பரசுராமன், மதியழகன், சுரேஷ், அருள் ராஜ் உட்பட 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இப்பணியின் போது 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தாமாகவே முன்வந்து தொடக்கம் முதல் இறுதி வரை கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.
சிறுவர்களின் இந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும் சமூகப் பொறுப்பையும் கண்ட கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவர்களை வெகுவாகப் பாராட்டி நெகிழ்ச்சியடைந்தனர்.

