காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நாகை அருகே மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனம்பநல்லூர், கருங்கண்ணி, மேலப்பிடாகை, மகிழி, திருமணங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காகப் பல கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு வீடாகக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டபோதிலும், அதில் முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், எப்போதாவது வரும் தண்ணீரும் பயன்படுத்த முடியாதவாறு அழுக்கு படிந்து கலங்கலாக வருவதாகச் சாடப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று மேலப்பிடாகை கடைத்தெருவில் திரண்டு அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பி. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலி குடங்களைத் தலையில் சுமந்தபடியும், சாலையில் அமர்ந்தபடியும் “போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும்” என வலியுறுத்திப் முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே, தகவலறிந்து வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெபஸ்தியம்மாள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், நாகை – திருத்துறைப்பூண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், K. பன்னீர்செல்வம், சங்கர், தம்புசாமி, N. பன்னீர்செல்வம், கிருஷ்ணன், செல்வராஜ், பழனிவேல், V. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்


