உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் இடுக்கு பிள்ளையார் கோவில் செல்ல அனுமதி இல்லை……
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள துவாரத்தின் வழியாக பக்தர்கள் உடலை வளைத்து நெளிந்து துவாரத்தில் இருந்து வெளியே வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

குறிப்பாக நடந்து 25ம் தேதி ஆந்திர மாநில பக்தர் மணிகுமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவில் துவாரத்தில் இருந்து வெளியே வந்து மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானார். நேற்று ஆந்திர பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிக்கொண்டு அவரை ஆண் ஒருவர் கையை பிடித்து வெளியே இழுத்த சம்பவம் நடைபெற்றது.
இதை இன்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் இடுக்கு பிள்ளையார் கோவிலில் வழிகாட்டு நெறிமுறை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள், மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் இடுக்கு பிள்ளையார் கோவில் துவாரம் வழியாக செல்ல அனுமதி இல்லை என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இடுக்கு பிள்ளையார் கோவில் வாசலில் இரண்டு கம்பிகள் வைத்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளது. அந்த இரு கம்பிகள் வழியாக உள்ளே வரும் பக்தர்கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோவில் துவாரம் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


