புதுச்சேரியில் போதையில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு அட்ராசிட்டி செய்த வாலிபரை கடுமையான போக்குவரத்து நிறைந்த சிக்னலில் போக்குவரத்து சரிசெய்யும் பணி செய்ய வைத்து
நுாதன தண்டனை வழங்கிய புதுச்சேரி நீதிமன்றத்தின் மாஸ் உத்தரவை வாகன ஓட்டிகளும், நெட்டீசன்களும் வரவேற்று குஷியாக கமென்ட் அடித்து வருகின்றனர்
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, செங்கேணி அம்மன் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(30), இவருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் இவர் சில தினங்களுக்கு முன், லாஸ்பேட்டை பகுதியில் குடி போதையில் நடு ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியே சென்ற பொதுமக்களுக்கு கடுமையான இடையூறுகளை கொடுத்து ரகளையில் ஈடுபட்டு அட்ராசிட்டி செய்தார்.

இதனால் கடுப்பான பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து புதுச்சேரி மாஜிஸ்திரேட் -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கமான சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்காமல் ஒரு மாஸ் உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி நீ பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால், அவர்களின் கஷ்டங்களை நீயும் அனுபவிச்சு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே புதுச்சேரியோட பயங்கர பிசியான பகுதியான ராஜிவ்காந்தி சதுக்கத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வடக்கு போக்குவரத்து போலீசாரோடு சேர்ந்து ‘டிராபிக்கை’ சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,டிராபிக் போலீஸா… என, சிலம்பரசன் ஷாக்காவதற்குள் ஆர்டர் கன்பார்ம் ஆனது. வேறு வழியில்லாமல், சொன்னபடியே நேற்று முன்தினமும்,நேற்றும் வாகனப் புகைக்கு நடுவே செம பிசியான ராஜிவ்காந்தி சதுக்கத்தில் நின்று கொண்டு, போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து டிராபிக்கை சீர் செய்தார்.
மாலை நேர பீக் ஹவர் டிராபிக்கில் வண்டிங்களை நிறுத்தி, வழி அனுப்பி வைக்கும்போது தான், அப்பாடா… ரோட்டுல போற பொதுமக்களோட கஷ்டம் இப்ப தான் புரியுது என, சிலம்பரசனுக்கு இப்போது ஞானோதயம் வந்துவிட்டது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று மீண்டும் சிலம்பரசன் நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவர் விடுவிக்கப்பட்டார்.இந்த நுாதன தண்டனை சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், இனிமே ரோட்டுல யாராவது அலப்பறை கொடுத்தால், நேரா கூட்டிட்டு போய் டிராபிக் சிக்னல்ல நிக்க வச்சிருங்கப்பா என, புதுச்சேரி வாகன ஓட்டிகளும், நெட்டீசன்களும் குஷியாக கமென்ட் அடித்து வருகின்றனர்.

