வந்தவாசியில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்
வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி
விநாயகர் சிலைகள் செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வந்தவாசி சுற்றுப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
இதையடுத்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர் இதில் ஐந்து முக விநாயகர், வீரசிவாஜி விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர்.
தற்போது 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது. இந்த ஆண்டின் புதிய வரவாக 6 பேக் விநாயகர் விற்பனைக்கு உள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும் தண்ணீர் மாசுபடாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டும் சிலைகள் தயார் செய்யப்படுவதாகவும் வாட்டர் கலர் பெயிண்ட் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் , அரசாங்கம் களிமண் எடுக்க அனுமதித்தால் வரும் ஆண்டில் சுற்றுச்சூழலை காக்கும் வண்ணம் களிமண் சிலை செய்ய தயாராய் இருப்பதாயும் சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.


