ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கையில் சூடம் ஏற்றி அங்காளம்மா தாயே.. அருள்புரிவாயே என பக்தி பரவசம்.
ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அங்காளம்மன்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆனி மாத அமாவாசை தினமான இன்று காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், சந்தனம்,தயிர்,வாசனை திரவியங்கள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனி மாதம் அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் பூசாரிகள் கோயில் வழக்கப்படி அங்காளம்மனை தோளில் சுமந்து வடக்கு வாயில் எதிரே அமைந்துள்ள ஊஞ்சல் மேடைக்கு கொண்டு வந்து ஊஞ்சலில் அங்காளம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் சூடம் ஏற்றி அங்காளம்மா தாயே!அருள் புரிவாயே! என பக்தி பரவசத்தில் அங்காளம்மனை வழிபட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஐ.பி.எஸ் தலைமையில் 637 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதேபோல் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டு இருந்தன.


