சீனிவாச பெருமாள் கோவிலில் தட்சிணாயன புண்யகாலப் பூஜை
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் தட்சிணாயன புண்யகாலப் பூஜை – அன்னக்கூட உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
*மதுரை:* ஆடி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை முடிச்சாலை பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் தட்சிணாயன புண்யகாலப் பூஜை மற்றும் அன்னக்கூட உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், சீனிவாச பெருமாள் திருக்கோவிலிலும் பிற்பகல் 12 மணிக்கு மேல் தட்சிணாயன புண்யகாலப் பூஜை சிறப்பு முறையில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மூலவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மூலவருக்கு முன்பாக சுமார் 10 அடி உயரத்தில் 20 படி புளியோதரை கொண்டு பெருமாள் திருவுருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டது.
அதனுடன் முறுக்கு, அதிரசம், தோசை, ஜாங்கிரி, மெதுவடை, இனிப்பு அப்பம், காராபூந்தி, காராச்சேவு உள்ளிட்ட பல்வேறு பலகாரங்களும், முக்கனிகளும் வைத்து அன்னக்கூட உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை, தூப, தீப ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்திப் பரவசத்துடன் சீனிவாச பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி மாதத்தின் முதல் நாளில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் குடும்ப நலன், வளம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்னக்கூட உற்சவத்திற்காக 20 படி புளியோதரை மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட அன்னம், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பெற்றுச் சென்றனர்.
