ஓசூர் ஓம் சக்தி கோவிலில் ஆடி அமாவாசை வேள்வி பூஜை
35 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட ஓம் சக்தி அம்மன்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம் சக்தி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் சக்திகள் அனைவரும் ஒன்றுகூடி உலக நன்மை, மக்கள் நலன், குடும்ப வளம் மற்றும் அமைதி வேண்டி சிறப்பு வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக, ஸ்ரீ ஓம் சக்தி அம்மனுக்கு சுமார் 35 ஆயிரம் வளையல்களால் பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்பட்டது. வண்ணமயமான வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அம்மனின் அருளைப் பெற்றனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வேள்வி பூஜையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஓம் சக்தி அம்மனை வழிபட்டு, உலக நன்மை மற்றும் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாமன்ற உறுப்பினர் புஷ்பா வரதராஜன் கலந்துகொண்டு, வேள்வி பூஜைகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் சக்தி நற்பணி மன்றம் செய்திருந்தனர்.

