மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து மோசடி
பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது திண்டுக்கல் சி பி சி ஐ டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி வழக்கறிஞர் அன்வர்தின் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.
4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் 7 நாள் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 பேரும் இன்று 05.08.26 திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் மாஜிஸ்ட்ரேட் பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து 4 பேரையும் இன்று மதியம் முதல் வருகின்ற 7ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார்.

