பட்டுக்கோட்டை அருகே வித்தியாசமான தூக்குத் தேர் திருவிழா
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சேண்டாகோட்டை, மாளியக்காடு, காசாங்காடு,அக்கரைவயல் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொன்றுதொட்டு வழிபட்டுவரும் தெய்வம் ஸ்ரீ கதிராளம்மன். திருவிழாவின் முக்கியமான தூக்குத் தேர் திருவிழா இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.

பொதுவாக தேர் என்பது பக்தர்கள் வடம் பிடிப்பார்கள். ஆனால் இங்கு தேருக்கு சக்கரம் இல்லை. மனிதர்களே சக்கரமாக மாறி சுமார் 5 டன் எடை கொண்ட தேரை 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தூக்கிக் கொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளிகளில் சுற்றி வந்தனர்.
இந்த தூக்குத் தேரை பார்ப்பதற்கு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தூக்குத் தேரை பார்த்து ஸ்ரீ கதிராளம்மனை வழிபட்டுச் சென்றனர். முன்னதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.


