தொடர் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட நபர் நாகையில் கைது
பல மாவட்டங்களில் தொடர் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட நபர் நாகையில் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் வெளிப்பாளையம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, அரசப்பட்டு, மேலத்தெருவை சேர்ந்த குணசேகர் மகன் விக்கி என்கிற விக்னேஷ் கண்ணன், வயது 26 என தெரியவந்தது.
இவர் பல்வேறு மாவட்டங்களில் கவனத்தை திசைதிருப்பி தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிப்பாளையம் மற்றும் வாய்மேடு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இவருக்கு எதிராக பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் வெளிப்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தொடர்புடைய மற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


