மானிய உரங்கள் கடத்தல் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருமலையம்பாளையத்தில் மானிய உரங்கள் கடத்தல் குறித்து உயர் மட்ட விசாரணை கோரி திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சி பகுதியில் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்படும் விவசாய உரங்கள் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டு, திரவமாக மாற்றி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, உயர் மட்ட விசாரணை நடத்தக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருமலையம்பாளையம் பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினரும், பேரூராட்சி தலைவருமான கவிதா உதயகுமார் மற்றும் 8-வது வார்டு உறுப்பினர் ஆனந்தகுமார் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் கூறப்படும் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள், கழிவுநீர் விவசாய நிலங்களில் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வணிக மற்றும் வரித்துறை அதிகாரிகள், மானிய உரங்கள் ஆயிரக்கணக்கான மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்ததை கண்காணிக்கத் தவறியதாகக் கூறப்படும் வேளாண்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மானிய விலை உரங்கள் கோவைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு, அவை திரவமாக மாற்றப்பட்ட பின்னர் கேரளாவுக்கு கடத்தப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உண்மை நிலையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


