மாகாளியம்மனுக்கு 10 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம்
ஆடி வெள்ளியை முன்னிட்டு மாகாளியம்மனுக்கு 10 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம்; திரளான பக்தர்கள் தரிசனம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் பழ மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பழ அலங்கார விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, அருள்மிகு மாகாளியம்மனுக்கு 10 டன் எடையிலான ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அன்னாசி, முலாம்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
குறிப்பாக, மாதுளம் பழங்களால் அம்மனுக்கு பிரம்மாண்டமான உடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவிலைச் சுற்றிலும் 10 டன் பழங்கள் கொண்டு கண்கவர் அலங்காரம் அமைக்கப்பட்டு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தொடர்ந்து, அம்மனுக்கு உதிரிப்பூக்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, பல்வேறு வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
வழிபாட்டின் நிறைவில், கோவிலில் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பழங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

