in

மதுரையில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி; உறுதிமொழி ஏற்ற பெண்கள்

மதுரையில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி; உறுதிமொழி ஏற்ற பெண்கள்

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், “விழித்தெழு இளையோனே” என்ற கருத்தை மையமாகக் கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான தங்கப்பாண்டி மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளியின் நிர்வாக இயக்குநர் அபிநாத் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில், கலைமாமணி கோவிந்தராஜ் தலைமையிலான கிராமியக் கலைக்குழுவினர் பறையிசை, கரகாட்டம் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதிலும், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கிராமியக் கலை நிகழ்ச்சிகளை ரசித்ததுடன், போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியிலும் இணைந்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி, தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பெண்களுடன் இணைந்து போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “போதைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி.

ஒரகடம் அருகே விதிமீறி வைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை