அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவ விழா தேரோட்டம்
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம்.
அபிராமி அம்மன் விநாயகர் சண்டிகேஸ்வரர் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நடைபெற்ற தேரோட்டத்தில் வீடுகள் தோறும் கோலமிட்டு தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி உடனாகிய ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து எமனை மீண்டும் உயிர்பித்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இத்தலத்தில் அபிராமி பட்டர் அவதரித்து அபிராமி அந்தாதியை இயற்றியது சிறப்பு. அபிராமி பட்டருக்காக தை அமாவாசையை அபிராமி அம்மன் பௌர்ணமி ஆக்கிய பல்வேறு புராண வரலாறுகளை உள்ளடக்கிய இவ்வாலயத்தில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்ச்சவம் விழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அபிராமி அம்மனின் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
அபிராமி அம்மன் சன்னதியில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரில் அபிராமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருள செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு சிதர்காய் உடைக்கப்பட்டு புறப்பட்ட தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் நான்கு வீதிகளில் தேர் வலம் வந்த போது பொதுமக்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.


