in

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு நெருக்கடி


Watch – YouTube Click

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு நெருக்கடி

 

நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள இயக்குநர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன், கபில், செல்வக்குமார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவினரால் தேடப்படும் குற்றவாளிகள் பெயரிலும், அவர்களின் பினாமிகளின் பெயர்களிலும் பல கோடி ரூபாய் சொத்துக்களை மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.

இந்நிலையில், அந்த நிலங்களைத் தமிழகம் முழுவதிலும் மோசடியாக விற்பனை செய்து வருவதாகக் கூறி நியோமேக்ஸ்சின் துணை நிறுவனங்களின் கீழ் முதலீடு செய்த முதலீட்டாளர்களான தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இன்று மதுரை தபால் தந்தி நகர்ப் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்துப் பேசிய முதலீட்டாளர்கள், “நியோமேக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆசை வார்த்தை காட்டி எங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் மற்றும் நிலத்தினை ஏமாற்றி வாங்கிக் கொண்டனர். இது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தால் உங்களுக்கான பணம் மீண்டும் கிடைக்காது என கூறி தொடர்ந்து மிரட்டி வந்ததால் இதுவரை நாங்கள் புகார் அளிக்கவில்லை.

ஆனால், தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் வெளிய வந்துள்ள நியோமேக்ஸ் இயக்குநர்கள் தொடர்ச்சியாகத் தமிழக முழுவதிலும் நிலங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதோடு, வாங்கியும் வருகின்றனர். எனவே, இதனைப் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி இன்று நேரில் வந்து புகார் அளித்துள்ளோம். தொடர்ச்சியாக நாங்கள் புகார் அளித்தால் எங்களது பணம் கிடைக்காது என முகவர்கள் மிரட்டி வருவதோடு கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

எனவே, எங்களது உயிருக்கு காவல்துறை உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும். தங்களது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் தான் பொறுப்பு” எனவும் தெரிவித்தனர். மேலும், நாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான பணத்தை மீட்டுத் தரப் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வந்த பின்பாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையிலும் கூட இதுபோன்று தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஜாமீனில் உள்ள நியோமேக்ஸ் இயக்குநர்கள் விற்பனை செய்துவருவதாகக் குற்றம்சாட்டினர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாகத் தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பலரும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், முறையாகப் பணத்தைத் திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி , கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்யப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் இதுவரை நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன் , வீரசக்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் துணை நிறுவன இயக்குநர்கள் என 29 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 17 கோடி மதிப்புக்கும் மேலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி நியோமேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு நிலங்கள் ஒப்படைப்பு தொடர்பான கருத்துக்கேட்பு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இளநீர் வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்

ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்