பழனி கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகளில், மீதமிருந்த 14 ஆக்கிரமிப்பு வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரம், மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டி மடம் பகுதியில் இருந்த 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கடைகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 2024-இல் முதற்கட்டமாக 120 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, வழக்குகளில் சிக்கி நிலுவையில் இருந்த மீதமுள்ள 14 ஆக்கிரமிப்பு கட்டிடங்களும், இன்று வட்டாட்சியர் மற்றும் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டன.
10 கோடி மதிப்புள்ள நிலம் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திருக்கோவில் நிர்வாகத்தால் சுமார் 1,317 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழனி அடிவாரம் கிரிவீதியில் மீட்கப்பட்ட 10 கோடி ரூபாய் சொத்துக்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 1,327 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


