நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா மேடையில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்
ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்- ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்
வரவேற்பு பேனரில் சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வைக்காத ஆத்திரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கோபமடைந்து பேச, பதிலுக்கு நலத்திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி அட்டையை தங்க தமிழ்ச்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே தேனி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே கடும் வாக்குவாதம்.
விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டதால் துவக்க விழா நிகழ்ச்சி விரைவில் முடிக்கப்பட்டு முகாம் மட்டும் நடைபெறுகிறது.
இன்று தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா மாவட்டம் தோறும் ஒரு இடத்தில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது.
முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.
தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதோடு தன்னை முட்டாள் என்று திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே துவக்க விழா முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். முகாம் மட்டும் நடைபெறுகிறது.


