ஹவாலா பணத்தின் ஹாட் ஸ்பாட்டாக மாறுகிறதா? மதுரை…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்ட மகராஷ்ட்ராவை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேரிடம் வருமானவரித்துறை விசாரணை – 3கோடியே 80 லட்சம் பறிமுதல் – பணம் குறித்து விவரங்கள் அளிக்க 5 பேருக்கு சம்மன்

ஹவாலா பணத்தின் ஹாட் ஸ்பாட்டாக மாறுகிறதா? மதுரை தீவிர விசாரணையில் வருமானவரித்துறையினர்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும், மதுரை மாநகர் பகுதியிலும் சட்ட விரோதமாக ஹவாலா பணத்தை கைமாற்றும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி காவல் துறையினர் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இதனிடையே மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் ஹவாலா பணமாற்ற கும்பலின் நடமாட்டம் இருப்பதாக விளக்குத்தூண் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றில் அமர்ந்து ஹவாலா பணம் கைமாற்றப்பட்டது தெரியவந்த நிலையில் காரை மடக்கி சோதனையிட்டபோது காரில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஹவாலா கும்பல் கை மாற்றி வந்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஹவாலா பணத்துடன் சிக்கிய மதுரையை சேர்ந்த பாபுராவ், பிரதமேஷ், மகாராஷ்டிராவை சேர்ந்த விட்டல், அக்ஷய்,விஜய் ஆகிய 5 பேரை ரொக்க பணத்துடன் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ஹவாலா பணம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றி ஹவாலா பணம் பரிமாற்றம் குறித்து இரவு 3 மணி வரை நடத்தினர்.

இது நேரத்தில் ஐந்து பேரிடமும் இருந்த 6 செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் வாகனங்களை விடுவித்த நிலையில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேருக்கும் வருமானவரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தவுள்ளனர்.


