மரக்காணத்தில் சாந்த சொரூப ஆஞ்சநேயர் கோயில் லட்சதீப விழா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சாந்த சொரூப ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் லட்ச தீப விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதி அன்று நடைபெறுவது வழக்கம்.
இதுபோல் இன்று மாலை இக்கோயிலில் 34 ஆம் ஆண்டு லட்ச தீப விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 8 மணி முதல் வரதராஜ பெருமாள் அலங்கார திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் சந்தன காப்பு வடை மாலை அணிவித்தல் வெற்றிலை மாலை அணிவித்தல் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்ச்சியான ஆஞ்சநேயர் கோயிலில் அருகில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றி பயபக்தியுடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்


