30 தொகுதிகளில் வேட்பு மனு…
இறுதி கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…
எண்ணிக்கை முடிந்தும் தொகுதி பெறுவதில் உடன்பாடு ஏற்படவில்லை..
முடிவின்றி வெளியேறிய நிர்வாகிகள்…
புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை வைசியாள் வீதியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் தலைமையில் நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாஜிம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கி 12.30 மணி வரை நீடித்தது. ஆனால் முதலில் காங்கிரஸ்-16, தி.மு.க.வுக்கு-12, இந்திய கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டுகள் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் எந்த தொகுதியில் யாருக்கு சீட்டு ஒதுக்குவது என்பது தொடர்பான நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் வெளியேறினார். இதற்கு முன்னதாகவே முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
30 தொகுதிகளில் வேட்பு மனு இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், புதுச்சேரியில் இன்று வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாள் என்பதால் காங்கிரஸ்-தி.மு.க.
சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிடவும் தனித்தனியாக வேட்பு மனுக்கள் தாக்க செய்ய இருப்பதாகவும், வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான 26-ந் தேதி தொகுதி பங்கீட்டில் முடிவு செய்யப்பட்ட பின் மனுக்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

