சிதம்பரத்தில் நந்தனார் ஆலயம், சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள ஶ்ரீ நந்தனார் கோயில் மற்றும் செளந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள திருநாளைப்போவார் என்கிற நந்தனார் கோயில் மற்றும் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.25-ம் தேதி கணபதி ஹோமத்துடன், நவக்கிரக ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமங்களுடன் யாகாசாலை பூஜை தொடங்கியது. 26-ம் தேதி யாகசாலையில் கும்பங்களில் சுவாமிகள் ஆராஹணம் செய்யப்பட்ட திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், முதல் கால யாகபூஜை மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
27-ம் தேதி காலை 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், ருத்ர ஹோமம், வஹோதார ஹோமம் மற்றும் பூர்ணாஹீதி நடைபெற்றது. இன்று காலை 4-ம் கால யாகபூஜையும், நாடி சந்தானம், பூர்ணாஹூதி தீபாராதனை முடிவுற்று யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஊர்வலமாக சென்று கோபுரத்தில் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கோயில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை நந்தனார் கல்விக் கழகத் தலைவர் டாக்டர் மணிரத்னம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


