டிடிவி.தினகரன் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார்
ஜெயலலிதா டிடிவி.தினகரனை தனது பிள்ளை போல வளர்த்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார் என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் “டெல்லி கார் குண்டு வெடிப்பு துயரச்சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்களும், அனுதாபங்களும். தமிழக அரசியலில் நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசிக்கொண்டும், தூங்குவதை போல நடிக்கும்,
தோல்விக்கும் மேல் தோல்வி அடையும் டிடிவி.தினகரன் இயலாமையால் பேசுபவர். தினகரன் பேச்சுக்கு End Card இல்லையா என மக்கள் யோசிக்கின்றனர்.
அதிமுகவால் பதவி பெற்றோம் உயர்ந்தோம் என்பதை மறந்து தினகரன் அழித்து விடுவேன், ஒழித்து விடுவேன் என பேசி குட்டிக்கரணம் போட்டு பார்க்கிறார். தினகரன் என்ன வேலை செய்தாலும் இனி தமிழகத்தில் இடமில்லை என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி உறுதியானைது.
அதிமுக கூட்டணி பற்றி அரைவேக்காட்டு அண்ணன் தினகரன் அவசரவசரமாக ஏதேதோ பேசி திருப்தி அடைகிறார். அதிமுக கூட்டணி பற்றி தினகரன் பேச வேண்டிய அவசியமில்லை. சம்மன் இல்லாமல் ஆஜராகிறார். அரசியல் மரபு இலக்கணம் இல்லாத தலைவர் தினகரன்.
கொடநாடு வழக்கில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் கொடநாடு வழக்கு எனச்சொல்லி தினகரன் எத்தனை நாள் பூச்சாண்டி காட்டுவீர்கள். கொடநாடு கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-வசம் ஒப்படைக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் அவர் நிரபராதி என நிரூபணமாகி உள்ளது.
தேர்தல் காலங்களில் கொடநாடு கொலை வழக்கு குறித்து பேசி வருகிறார்கள். ஜெயலலிதா டிடிவி.தினகரனை தனது பிள்ளை போல வளர்த்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
டிடிவி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியல் வாழ்வில் வெற்றி பெற முடியாது. டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல டிடிவி காத்திருக்கிறார்.
கடலும் வற்றாது, டிடிவியினால் கருவாடும் தின்ன முடியாது. அதிமுகவிலிருந்து பதவி சுகத்தை அனுபவித்து விட்டு திமுகவுக்கு செல்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் மக்களாட்சி மலர செய்ய அதிமுக பாடுபடுவோம். எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிடிவி தினகரன் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்.
எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வதை டிடிவி தினகரன் நிறுத்தி கொள்ள வேண்டும். டிடிவி தினகரன் பேசுவதை நாங்கள் காதை போர்த்தி, கண்களை மூடி, வாயை போத்தி வேடிக்கை பார்க்க மாட்டோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றினைவது என்பது முடிந்து போன ஒன்று, அதை பற்றி பேச வேண்டாம்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் SIR ஐ எதிர்க்கிறது. திமுக SIR ஐ வைத்து தமிழகத்தில் மக்களை குழப்பி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கூட்டணி அமைப்பதை ஊடகங்களிடம் கூற முடியாது.
2026 ல் தேர்தலுக்கு முன்னர் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் காவல்துறை முடங்கி கிடக்கிறது.
முதலமைச்சரால் ஒரு நிரந்தர டிஜிபி-ஐ நியமிக்க முடியவில்லை. அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்து நாம் பேச தேவையில்லை. அதிமுக – பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் தெளிவாக விளக்கம் கூறி விட்டார்.
ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரின் கருத்துக்கு பதில் கருத்து சொல்ல தேவையில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அட்டை போல ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளும், அதிமுக – பாஜக வின் இணக்கமான பயணத்தை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை, திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் கள்ள மவுனம் காக்கிறார்கள்” என கூறினார்.


