தலையில் தேங்காய் உடைக்கும் வினோத விழா
நத்தம் அருகே ஆடித்திருவிழாவில் பார்க்கவே புல்லரிக்கும் வகையில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத விழா : 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியபட்டியில் குரும்பாகுல அருள்மிகு ஶ்ரீ மகாலெட்சுமி, ஶ்ரீ கருப்புசாமி கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இத்திருவிழா நேற்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது ஆண்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகாலட்சுமி அம்மன் முன் கோரிக்கை வைத்து வேண்டுதல் நிறைவேறினால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் நடைபெற்று வரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது நேர்த்திக்கடன் வைத்த 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு தரையில் வரிசையாக அமர வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்.
இதில் பழனி,தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கம்பிளியம்பட்டி, ஆண்டியபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


