தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்…தமிழக சட்டசபையில் சம்பிராதயப்படி ஆளும் அரசால் தயாரிக்கப்பட்டு வழங்கும் உரையை ஆளுநர் படிக்க வேண்டும். தொடர்ந்து சில ஆண்டாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். இந்த ஆண்டும் அதேநிலை நீடித்துள்ளது. ஆளுநர் சட்டசபையில் சட்டமன்றம் தொடங்கும் முன்பு தேசியகீதம் பாடவில்லை என்ற காரணத்தை காட்டி சட்டசபையிலிருந்து உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார்.
இது மிகவும் தவறான செயல். ஜனநாயக படுகொலைக்கு சமம். இந்திய அரசியலமைப்பை ஆளுநர் தமிழக மக்கள் மத்தியில் அவமதித்துள்ளார். ஆளுநர் நிபந்தனையற்ற மன்னிப்பை தமிழக மக்களிடம் கேட்க வேண்டும்.
புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஒப்புதல் தராத நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற கோப்பை அனுப்பிய போது மாற்றம் செய்ய வேண்டும் என்றார். அதை நான் ஏற்கவில்லை. மத்தியில் உள்ள மோடி, அமித்ஷா உத்தரவின்பேரில் கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார்.
இதேநிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக திமுக ஆட்சிக்கும் தொல்லை கொடுத்து வருகிறார். தமிழக அரசுக்கு எதிர்மறையான கருத்துக்களை பொதுமேடைகளில் பேசுகிறார்.
தமிழக அரசை நேரடியாக விமர்சிக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது. ஆளுநர் இந்திய அரசியலமைப்புக்கு கட்டப்பட்டு நடக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமிழக அரசுக்கும், திமுக ஆட்சிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
இதற்கு மூல காரணம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். அவர்கள் ஆளுநரை ஊக்குவித்து, சட்டவிரோத, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயலுக்கு துாண்டிவிடுகின்றனர். மத்திய மோடி அரசு ஜனநாயகத்தை மதிப்பதில்லை. அம்பேத்கர் உருவாக்கிய சமத்துவம், சகோரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதில்லை.
சட்டமன்ற நிகழ்ச்சிகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என்பதை பற்றி மோடி அரசு கவலைப்படுவதில்லை. பாராளுமன்றத்தில் மட்டும் ஜனாதிபதி மோடி அரசு அனுப்பும் உரையை வாசிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். தமிழக முதலமைச்சர் அனுப்பும் உரையை வாசிக்காமல் புறக்கணிப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் மோடி அரசு இதை அரங்கேற்றி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு நம்மையெல்லாம் வெட்கி தலைகுனிய வைக்கிறது.
கவர்னராக இருக்க தகுதியில்லாத ஒருவர் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டும் என தெரிவித்தார்…


