மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்த விழிப்புணர்வு வாகன பேரணி
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். 100க்கு மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மயிலாடுதுறையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம், உரிமம் வாங்க 8 போடு, உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து சாலை பாதுகாப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியானது மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராம்குமார்,விஸ்வநாதன்,அழகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


