சமய நல்லிணக்க விழாவாக கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா
மயிலாடுதுறையில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் உற்சவத்தில் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார திருத்தேர் பவனி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் “நான் தாழ்ந்திட, அவர் உயர்ந்திட” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி மறையுரையாற்றப்பட்டது.
இதில் அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளார் மற்றும் உதவி பங்குபெறும் மனோஜ் சேவியர் அடிகளார் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், மனிதநேயம் நிலைத்திடவும் வேண்டி மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினர்.
புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் ஆலய வளாகத்தில் இன்னிசை முழங்க, வான வேடிக்கையுடன் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்பசெட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
வழிநெடுகிலும் பொதுமக்கள் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


