அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை
தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது.
தஞ்சை அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலூரில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள், மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
பழமையான இக்கோயிலில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 7 -ம் தேதி கும்பாபிஷேகம் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோயிலில் தினமும் பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள், காசவளநாட்டார்கள் இணைந்து 1,008 குத்துவிளக்கு பூஜை நடத்திட முடிவு செய்தனர். அதன்படி ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலை கோயில் வளாகத்தில் 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.


