உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா 7-வது நாளான இன்று சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் குழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் திருவிழாவில் இன்று 7-வது திருநாளில் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி சண்முகர் பிற்பகல் 01-30 மணிக்கு சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு வண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு ஆறுமுக மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்துடன் அருட்பாலித்தார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலிலில் சுவாமி சண்முருக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சார்யார்களுக்கும் திரிசுதந்திரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் காலை 09- மணிக்கு நடைபெறவேண்டிய ஏற்றம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 01-30 மணிக்கு நடைபெற்றுள்ளது.


