அறுபடை கோவில்களில் இருந்து வேல்கள் சிறப்பு பூஜை
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக அறுபடை கோவில்களில் இருந்து வேல்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது, மாநாட்டையொட்டி திடலில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் கண்காட்சி ஜூன் 16 ஆம் தேதி மக்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை கோவில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளது, ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
மூன்றாம் நாள் நிகழ்வில் ஆறுபடை வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட வேல்கள் திடலுக்கு கொண்டு வரப்பட்டன.
முதலாம் படை வீட்டின் வேல் நரிக்குறவ மக்களும், இரண்டாம் படை வீட்டின் வேல் திருநங்கையர்களும், மூன்றாம் படை வீட்டின் வேல் தொழிலாளர்களும், நான்காம் படை வீட்டின் வேல் விவசாயிகளும், ஐந்தாம் படை வீட்டின் வேல் மாற்றுத்திறனாளிகளும், ஆறாம் படை வீட்டின் வேல் நாட்டுப்புற கலைஞர்களும் எடுத்து வந்தனர்.
வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு முருகன் சிலைகளுடன் தரிசனத்திற்க்காக வைக்கப்பட்டது.
முருக பக்தர் மாநாட்டு திடலுக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அறுபடை வீடுகளில் உள்ள முருகனை தரிசனம் செய்தனர்.