நாகூர் ஆண்டவர் கந்துாரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்காக சந்தனம் அரைக்கும் பணி
உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் கந்துாரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்காக சந்தனம் அரைக்கும் பணி தீவிரம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு வரும் 30ம் தேதி இரவு நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை சந்தன பூசும் வைபோகம் நடைபெற உள்ளது.
கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டது.
இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரகட்டைகளை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும்.
பின் நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, டிசம்பர் 1ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.

பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.


