தை மாத அமாவாசை தினத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மேல்மலையனூர் அங்காளம்மன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் தை மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை மாத அமாவாசை தினத்தையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பால், சந்தனம்,பழரசம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் அங்காளம்மன் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை அடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு பட்டு உடுத்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காளம்மன் அருள் பாலித்தார். காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
பின்னர் நள்ளிரவு 11.30 மணி அளவில் பூசாரிகள் வழக்கப்படி அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தோளில் சுமந்து வந்து மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மேடையில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் சூடம் ஏற்றி பக்தி பரவசத்தில் அங்காளம்மா தாயே அருள் புரிவாயே.. ஓம் சக்தி..என முழக்கம் இட்டும் சாமி ஆடியும் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
மாதாமாதம் அமாவாசை தினத்தில் நடைபெறும் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இம்மாதம் தை மாத அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் மட்டும் இல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


