சேத்தியாதோப்பு அருகே மூன்று கோவில்களின் மகா கும்பாபிஷேகம்
சேத்தியாதோப்பு அருகே மூன்று கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் சாவடி கிராமத்தில் 3 கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சித்தி விநாயகர், சமயபுரம் மாரியம்மன், காளியம்மன் ஆகிய மூன்று கோவில்களின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பணிகள் முடிவுற்றபின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிவுற்றபின் புனித நீர் கடம் புறப்பாடு ஊர்வலமாக நடைபெற்று கோவில் கோபுரங்களின் மேல் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து முதலில் சித்தி விநாயகர் பின்னர் சமயபுரம் மாரியம்மன்,, காளியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக தரிசனம் செய்து கோவில்களின் மூலவரை வணங்கியும் சென்றனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.