தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும்.

இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி, பழைய துறைமுகத்தில் இருந்து ஒலி எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டனர்.
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏடிஎஸ்பிகள் 1 ஏ எஸ் பி, 5 டிஎஸ்பி, 15 இன்ஸ்பெக்டர்கள், 35 எஸ்ஐகள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா திருப்பலி மற்றும் மாதா சப்பரப்பவனி நடைபெற உள்ளது இதை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


