மருத்துவமனையில் இரவு நேரத்தில் வார்டு பகுதியில் போதை ஆசாமிகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நோயாளிகள் அச்சத்தில் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் போதைப் பழக்கமுள்ள நபர்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்து நோயாளிகளை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகுந்த பயத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
நேற்று இரவு, போதை நிலையில் இருந்த ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து, அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுடன் இருந்த பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், அதே வார்டில் படுத்து உறங்கியுள்ளார்.

இதனால் பயந்த நோயாளிகள் வார்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனைக்குள் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் பூங்கொடி இடம் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவலர் பூங்கொடி, அந்த நபரை எழுப்பி வெளியே அனுப்பியுள்ளார்.ஆனால், வெளியேறும் போது அந்த நபர் பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினர் அந்த நபரை மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.
மேலும், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவப் பகுதியிலும் இரவு நேரங்களில் காவலர்கள் இல்லாததால், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் போதைப் பழக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், செஞ்சி அரசு மருத்துவமனையில் இரவு காவலர் நியமிக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


