இந்திய தொலைக்காட்சிகளுக்கு இலங்கையில் தடையா?
நடவடிக்கை எடுக்கும் யாழ் பொலிசார்!
சட்டவிரோதமாக இந்திய செய்மதி தொலைக்கட்சி சேவைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் மீது பொலிசார் தேடுதல் நடாத்தியதுடன் பல வர்த்தக நிறுவனங்களில் விற்பனைக்கு இருந்த உபகரணங்களையும் கைப்பற்றினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள சில வர்தத்க நிலையங்களில் பொலிசார் இன்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிசார் இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஒளிபரப்பாகும் செய்மதி தொலைக்கட்சி சேவைகளை இலங்கையில் விற்பனை செய்வதோ அல்லது பார்வையிடுவதன்மூலம் சட்டவிரோதமாக பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
சன் டிறைக்ற், வீடியோ கோன், டாட்டா ஸ்கை, டிஸ் ரிவி என்ற பெயர்களில் இந்தியாவில் இயங்கும் சேவைகளை பார்வையிடுவதற்கான உபகரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்து நாடுமுழுவதும் பலர் விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால் பல கோடி ரூபா இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுவருகின்றது.
இந்த சேவையை இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களையும் பயன்படுத்துபவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொலிசாருக்கு பணித்திருக்கின்றது.
இதனையடுத்தே இவ்வாறு சட்டவிரோத விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களையும் அவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் சோதனையிட்டு அவர்கள் மீது வழக்கு தொடர பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


